ஜோலார்பேட்டை: திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய வேட்டையில் 10 பேரை கைது செய்து, 45 லிட்டர் கள்ள சாராயமும், 2,800 லிட்டர் ஊறலும் அளித்து மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் கள்ள சாராய விற்பனை முற்றிலும் தடுக்கும் நடவடிக்கையில் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அதிரடியாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் மாவட்ட முழுவதும் 8 தனி படைகள் அமைத்து கள்ள சாராயம் விற்பனை, சூதாட்டம் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை அதிரடியாக கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் திருப்பத்தூர், வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர்கள் உலகநாதன், ஜெயலட்சுமி உள்ளிட்ட போலீசார் மாதகடப்பா, புதூர்நாடு, கொரிப்பள்ளம் மலைப்பகுதிகளில் திடீர் சாராய வேட்டை நடத்தினர். அப்போது நடைபெற்ற சோதனையில் 10 சாராய வியாபாரிகளை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 45 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
இதனை அடுத்து மாதகடப்பா பகுதியில் உள்ள மலைப்பகுதியில் கள்ள சாராயம் காய்ச்ச வைத்திருந்த 800 லிட்டர் ஊறலை கண்டுபிடித்து அழித்தனர். மேலும் இதே போன்று திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு மலை கிராமத்தில் 2000 லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்து அழித்தனர். நேற்று முன்தினம் ஒரே நாளில் மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்ற சாராய பேட்டையில் 45 லிட்டர் கள்ள சாராயமும், 2,800 சாராய ஊறல்களும் அழிக்கப்பட்டு, சாராய விற்பனையில் ஈடுபட்ட 10 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், எஸ்பியின் இந்த அதிரடி நடவடிக்கையால் மாவட்டம் முழுவதும் கள்ள சாராய விற்பனையில் ஈடுபடும் நபர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
The post ஒரே நாளில் 10 பேர் கைது எஸ்பி தலைமையில் போலீசார் அதிரடி படம் உண்டு… பேனர் appeared first on Dinakaran.